Wednesday, March 9, 2011

தி.மு.க - காங்கிரஸ் உடன்பாடு ஏற்பட முழு முயற்சி மேற்கொண்டஇந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு கலைஞர் -சோனியா நன்றி



Tuesday, March 08, 2011



நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற வேண்டுமென அனைவரும் விரும்பினர். இந்த விருப்பம் நிறைவேறும் என்று இருந்த சூழ்நிலையில் பேச்சு வார்த்தை முறிவடைந்து மத்திய அமைச்சரவையிலிருந்து தி.மு.க அமைச்சர்கள் விலகிக் கொள்வது என்று முடிவெடுத்தனர்.

மத்தியில் டாக்டர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு எத்தகைய சிக்கலும் ஏற்பட கூடாது, அதே நேரம் தமிழகத்தில் டாக்டர் கலைஞர் தலைமையிலான தி.மு.க அரசு வரும் தேர்தலிலும் தொடர வேண்டும் என அக்கரை கொண்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இந்த நெருக்கடியான சூழ்நிலையில் தலையிட்டது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநிலத் தலைவரின் வேண்டுகோளின் அடிப்படையில் தேசிய தலைவரும், மத்திய வெளியுறவுத்துறை இணையமச்சருமான மாண்புமிகு இ. அஹமது சாஹிப் அவர்கள் டில்லியில் காங்கிரஸ் - தி.மு.க தலைவர்களுடன் இதற்கான முயற்ச்சியில் ஈடுபட்டார்.

07-03-2011 திங்கள் முதல் தொடர்ந்து அவர் மேற்கொண்ட முயற்ச்சியின் பலனாக நல்ல இணக்கமான சூழ்நிலை ஏற்பட்டது. 08-03-2011 செவ்வாய் பிற்பகலில் உடன்பாடு காண வேண்டும் என்ற நோக்கத்தோடு காரியங்கள் முடுக்கி விடப்பட்டன.

மத்திய நிதி அமைச்சரும் காங்கிரஸின் மூத்த தலைவருமான பிரணாப் முகர்ஜி அலுவலகத்தில் காங்கிரஸ் செயலாளர்கள் அஹமது பட்டேல், குலாம் நபி ஆசாத், தி.மு.க மத்திய அமைச்சர்கள் மு.க. அழகிரி, தயாநிதி மாறன் ஆகியோரை உடன் இருந்து பேச வைத்தார் இ. அஹமது. 63 இடங்கள் வேண்டுமென்பதில் காங்கிரஸ் உறுதியுடன் நின்றது. உடன்பாட்டை ஏற்படுத்தியே தீர வேண்டும் என்ற முடிவில் தி.மு.க ஒரு இடத்தையும் பாட்டாளி மக்கள் கட்சி ஒரு இடத்தையும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒரு இடத்தையும் விட்டுக் கொடுப்பதென்று முடிவு செய்யப்பட்டது.

இந்த முடிவை இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவர் இ. அஹமது அவர்கள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களிடம் தெரிவித்தார்.

ஒரு இடத்தை விட சிறுபான்மையினருக்கு பாதுகாப்பான மத்திய, மாநில அரசுகள் தொடரச் செய்வதே புத்திசாலித்தனமானது என்பதால் அந்த முடிவிற்கு தமிழ்நாடு மாநிலத் தலைமை சம்மதம் தெரிவித்தது.

இன்று 08-03-2011 மாலை 3.45 மணியிலிருந்து மத்திய அமைச்சர்கள் இ. அஹமது, பிரணாப் முகர்ஜி, குலாம் நபி ஆசாத், தயாநிதி மாறன் ஆகியோர் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களிடம் தொலைபேசியில் பேசி நிலவரங்களைக் கூறினர். நிலைமைகளை தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் உணர்ந்து ஒரு தொகுதியை விட்டுக் கொடுக்க மாலை 4.30 மணிக்கு சம்மதம் தெரிவித்தார். அதன் பிறகே தி.மு.க - காங்கிரஸ் உடன்பாடு சோனியா காந்தியின் இல்லத்தில் குலாம் நபி ஆசாத்தால் அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் மகிழ்ச்சி ஏற்பட்டது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் இந்த மகத்தான முயற்ச்சிக்கு தி.மு.க தலைவர் கலைஞர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் மனமார்ந்த நன்றி தெரிவித்தனர்.

இந்த முடிவு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஊழியர்கள் இடையே வருத்தத்தையும் சோர்வையும் ஏற்படுத்தி இருக்கும் என்பது உண்மை. ஆனால் இந்த கூட்டணியின் விளைவு எதிர் காலத்தில் முஸ்லிம் சமுதாயத்திற்கும் தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கும் ஒரு மிகப் பெரிய பலனைப் பெற்றுத் தரும்.

எல்லாவற்றையும் விட, இன்றைய நெருக்கடியான சூழ்நிலையில் மதவெறி சக்திகள் தடுக்கப்பட்டு மதசார்பற்ற - அதிலும் குறிப்பாக சிறுபான்மை முஸ்லிம்களுக்கு பாதுகாப்பான அரசுகள் நீடித்து நிலைப்பதற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செய்த தியாகம் வரலாற்றில் இதன் மூலம் இடம் பெறுகிறது.

எல்லாம் வல்ல அல்லாஹ் நன்மையை நாடியிருப்பான். அவன் நாட்டப்படியே எல்லாம் நடக்கும் சோர்வின்றி உழைப்போம் கூட்டணியின் வெற்றிக்கு பாடுபடுவோம்.

- கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர்
மாநில பொதுச் செயலாளர்


1 comment: