Sunday, May 22, 2011

மலேஷியாவில் உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு கோலாகலத் துவக்கம்


மலேஷிய அமைச்சர்கள் – அப்துல் ரஹ்மான் எம்.பி. – இலங்கை அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்பு !!

கோலாலம்பூர் : மலேஷியாவில் உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு 20.05.2011 வெள்ளிக்கிழமை மாலை புத்ரா உலக வர்த்தக மையத்தில் கோலாலகலமாகத் துவங்கியது.
மாயின் அபூபக்கர் – பரக்கத் அரங்கில் நடைபெற்ற அறிமுக விழாவின் துவக்கமாக இறைமறை வசனங்களை மஸ்ஜித் இந்தியா இமாம் மௌலவி ஹாபிஸ் எஸ்.எஸ். அஹ்மது பாஜில் பாக்கவி ஓதினார். கவிஞர் மைதீ. சுல்தான் வரவேற்புரை நிகழ்த்தினார்.

நாணயமாற்று வியாபாரிகள் சங்க தலைவர் முனைவர் ஹாஜி முஹம்மது சுஐபு தலைமை தாங்கினார். பெர்மிம் தலைவர் டாக்டர் ஹாஜி சையது இபுராகிம் வாழ்த்துரை வழங்கினார்.

காயிதெமில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளரும், வேலூர் நாடாளுமன்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினருமான எம். அப்துல் ரஹ்மான் அவர்கள் அவர்கள் தனது வாழ்த்துரையில் தமிழை ஆட்சிமொழியாக்க வேண்டும் என்ற வேண்டுகோளை வைத்தவர் கண்ணியத்திற்குரிய காயிதெமில்லத் முஹம்மது இஸ்மாயில் சாஹிப். அழகு தமிழை மிகவும் இனிமையாக பேசக்கூடிய தலைவராக விளங்கி வந்தவர் சிராஜுல் மில்லத் ஏ.கே.ஏ. அப்துஸ் ஸமத் சாஹிப் அவர்கள். அவர்களைப் போல் பேசக்கூடிய தலைவர் எவரும் காணப்பெறவில்லை என்றார். மலேஷியாவில் இதுபோன்றதொரு சிறப்பு மிகு மாநாட்டை நடத்தும் ஏற்பாட்டளர்களைப் பாராட்டுவதாகக் குறிப்பிட்டார்.
அதனைத் தொடர்ந்து டி.எம்.ரீ. ஹஸன் அலி எம்.பி., முனைவர் அய்யூப் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மாநாட்டுத் தொடக்க விழா
மஹ்ரிப் தொழுகைக்குப் பின்னர் மாநாட்டு தொடக்க விழா டான்ஸ்ரீ எஸ்.ஓ.கே. உபைதுல்லா அரங்கில் நடைபெற்றது. இறைமறையை மலேசியா ஹதீஸ்கலைக் கல்லூரி தலைவர் ஹாஜி முகம்மது பாரீத் ரவி அப்துல்லா ஓதினார்.
டத்தோ ஹாஜி முகம்மது இக்பால் அவர்கள் தனது தலைமையுரையில் இதுபோன்றதொரு மாநாடு சிறப்புற நடைபெற உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
புவான்ஸ்ரீ மெஹருன்னிசா உபைதுல்லா, டத்தோ ஹாஜி பரக்கத் அலி, ஹாஜி ஷி.வி. முகம்மது இத்ரீஸ், டத்தோ டாக்டர் ஹாஜி முஹம்மது ஹனீஃபா, டத்தோ ஹாஜி சலாஹுத்தீன், டத்தோ ஷேக் அக்மால் அலாவுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
டத்தோ ஹாஜி கமருல் கான் சையது காதிர் வரவேற்புரை நிகழ்த்தினார். அகில இந்திய ஹஜ் கமிட்டி தலைவர் ஏ. அபூபக்கர், கிம்மா தலைவர் டத்தோ சையது இப்ராஹிம், மலாயப் பலகலை உதவித் துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் குருநாதன் ரத்தினவேலு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அவர்களின் வாழ்த்துச் செய்தியினை டத்தோ டாக்டர் ஹாஜி முகம்மது ஹனீஃபா வாசித்தார்.
பிரதமர் அலுவலக அமைச்சர் டான்ஸ்ரீ நூர் முஹம்மது யாக்கோப் தனது சிறப்புரையில் செம்மொழி சிறப்புப் பெற்ற தமிழ் மொழியில் இஸ்லாமிய இலக்கியங்கள் குறித்து நடத்தப் பெறும் மாநாட்டிற்கு வாழ்த்து தெரிவித்தார்.
இலங்கை நீதித்துறை அமைச்சர் ரவூஃப் ஹக்கீம் வாழ்த்துரை வழங்கினார். விழா சிறப்புற நடைபெற உதவிய புரவலர்கள், சிறப்பு விருந்தினர்கள் எம். அப்துல் ரஹ்மான் எம்பி, இலங்கை அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கௌரவிக்கப்பட்டனர்.
ஹாஜி ஹிஷாமுடீன் டான்ஸ்ரீ உபைதுல்லா நன்றியுரை நிகழ்த்தினார். நிகழ்வினை இலங்கை பி.எச். அப்துல் ஹமீது மற்றும் மலேசியாவின் நாச்சியா மஜீது ஆகியோர் தொகுத்து வழங்கினர்.
தமிழகம், இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம், பர்மா, பாங்காக்,சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும் பேராளர்கள் பங்கேற்றுள்ளனர்.
Tamil:World Islamic Tamil Literary conference in Malaysia

No comments:

Post a Comment